“என்ன எழவுடா இது? சும்மா சண்டை, குத்து, வெட்டு, கொலை, உரிமை போராட்டம் என்று புலம்பிக் கொண்டு… “மனிஷனா பொறந்தமா நிம்மதியா வாழ்ந்தமா செத்தமான்னு இல்லாம உலகத்தை நாசப்படுத்தி நிம்மதியை கெடுத்து அதற்கு ´புரட்சி´ என்ற பெயரைக் கொடுத்து வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள் தானா..?” இப்படியொரு ஆதங்கத்துடன் யாராவது நம்மிடம் பேச ஆரம்பித்தால் என்ன நினைப்போம்?
“அடடா… நல்ல மனுஷன். நாட்டு நடப்பு குறித்து எவ்வளவு அக்கறை” என்பதோடு, நம்மையும் ஆமோதிக்க வைக்கும் கருத்தாக்கமாக அவை மாற்றிவிடும் தானே? அங்கேதான் தந்திரம் ஒளிந்துக் கொண்டிருக்கிறது… சோஷியல் ஷாவினிஸ்டுக்கள் போல் இந்த சோஷியல் – ஷாவினிஸ்டுகள் மார்க்ஸிட்டுகளில் இருந்து பிரிந்த போலி மார்க்ஸிட்டுகள். மற்ற இனத்தினர், பிற நாட்டார் மீதும் நிறவேற்றுமை பார்க்கும் பாஸிசம் குணம் கொண்டது சோஷியல் – ஷாவினிஸ்டு.
தங்கள் தேசியத்தின் பெயரால் அயல் தேசத்தினர் மற்றும் வேற்று இனத்தினர் மீது விரோதப் பிரச்சாரம் செய்வது, அப்பிரச்சாரங்களை தங்கள் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் தொடர்புள்ள ஊடகங்கள் வழியாக சிறுகச்சிறுக மக்களிடம் பதிவு செய்வது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் தாக்குதல் தொடுப்பது. இதன் மூலம் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதும் தன்னின முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வெறிக்கு ஆதரவாக இருப்பதும் சோஷியல் – ஷாவினிஸ்ட்டு கொள்கைளாகும்.
1940-இல் இட்லரின் நாஜி படைகள் பிரான்ஸ்சுக்குள் நுழைந்தபோது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோஷியல் – ஷாவினிஸ்டுகள் தங்கள் புத்தியைக் காட்டினர். இட்லரின் ஐந்தாம் படையான பெட்டெயினை உதவி பிரதம மந்திரியாக்கி இனவெறிக்கு ஆதரவாக நின்றனர். தங்கள் சொந்த நாட்டு பிரஜைகளான பிரான்ஸ் கம்யூனிஸ்ட்டுக்கள் படுகொடூரமாக கொன்றனர் சோஷியல் – ஷாவினிஸ்டுகள்.
சோஷியல் – ஷாவினிஸ்ட், ´சோஷியல் – பாஸிச´மாக மாறியது…
வாய் முழுக்க சோஷியலிசம் பேசுவது. செயலோ பாஸிசத்துக்கு உதவியாக இருப்பது. பாட்டாளி மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு ஆதரவளித்துக் கொண்டு முதலாளித்துவத்தை கடுமையாக எதிர்ப்பதுமாக ஜோடனை செய்வது. இதன் மூலம் பாட்டாளி மக்களின் உண்மையான போராட்ட அமைப்புகளையும், தொழிலாளர்களையும் திசை திருப்பி பிளவு ஏற்படுத்துவது. இதற்கான கூலியை முதலாளித்துவம் சோஷியல் – ஷாவினிஸ்ட்களுக்கு கொடுப்பது…
´ஐரோப்பிய சோஷியல் – டெமோக்ரடிக் கட்சி´களின் தலைமைகள் இப்போக்கிலேயே செயல்பட்டன. ´தலையிடா கொள்கை´ பேசிய இத்தாலியைச் சேர்ந்த மூசோலினி, பிராங்கோ போன்றவர்கள் இதற்கு சிறந்த உதாரணம். ஐரோப்பாவில் தொற்றிய ´சோஷியல் – டெமோக்ரடிக்´ அரசியல் தொற்று நோய் இன்று உலகம் முழுவதிலும் அக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தை தொட்டுவிட்ட ´சோஷியல் – ஷாவினிஸ்டு´ உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றைய காலகட்டம் வரையில் தந்திரமாகவே செயல்படுகிறது.
வன்முறைகளை எதிர்ப்பதாக மக்களிடம் பிரச்சாரம் செய்து அதே வன்முறைகளை மக்கள் மீது நிகழ்த்துவது சோஷியல் ஷாவினிஸ்டு!உதாரணத்திற்கு ஈராக் மற்றும் ஈழத்தின் மீதும் நடத்தப்பட்ட வன்முறைகள்.
அரசியல்வாதிகளால் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் நாம்? இது எப்படி நடந்தது? மக்களிடம் ´சோஷியல் – ஷாவினிஸ்டு´, “வன்முறையால் வன்முறையை அடக்காதே. ஜனநாயக உரிமை உள்ள நாட்டில் உனக்கான உரிமையை அமைதியான முறையில் வென்றெடு. உங்களுக்கான பிரதிநிதிகள் நாங்கள். சட்டங்கள் மூலமாக நமது கோரிக்கைளை வென்றெடுப்போம்…”
இப்படித்தான் மக்களிடம் எழுச்சியை மழுங்கடிக்க ஆரம்பித்தது சோஷியல் ஷாவினிஸ்டு.
சோஷியல் ஷாவினிஸ்டு சித்தாந்தங்களை உருவாக்கியதில் முக்கியமான ´எட்வர்ட் பெர்ன்ஸ்டீன்´ 1899-இல் “சோஷியலிசத்தின் முன் தேவைகள்” என்ற நூலை எழுதிய போது உண்மையான மார்க்ஸியவாதிகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர்.
மார்க்ஸின் தத்துவங்கள் எல்லாவற்றையும் குத்தி குதறி குழப்பி வைத்திருந்த ஜனநாயக கொள்கைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான வர்க்கப்போராட்டங்கள் குறித்த தத்துவங்கள் எல்லாம் தலைக்கீழாய் போனது.
எட்வர்ட் பெர்ன்ஸ்டீனின் நூல் பிரசுரத்திற்கு பின் மற்ற போலி மார்க்ஸிட்டுக்களுக்கும் உதவியாக இருந்தது. ´எட்வர்ட் பெர்ன்ஸ்டீன்´ காலாவதியான மார்க்ஸியத்தின் பிழைகளை திருத்தி விஸ்தரித்திருப்பதாக கூறிக்கொண்டார்.
“போராடு! அப்பொழுதுதான் ஏதாவது வெற்றி அடைய முடியும்…” என்ற கார்ல் மார்க்சின் வர்க்கப்போராட்டம் குறித்த புகழ்பெற்ற தத்துவத்தையும் தந்திரமாக திசை திருப்பிவிட்டது சோஷியல் ஷாவினிஸ்டு.
“முதலாளித்துவத்திலிருநது சோஷியலிஸத்தை அடைய ஜனநாயம் உறுதி தருகிறது. ஆகவே தொழிலாளர்கள் போராட்டத்தில் உரிமைகளை வெல்வதைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகளின் மூலமே தங்கள் உரிமைகளை வென்றெடுக்கலாம். மார்க்ஸின் வர்க்கப் போராட்டம் இன்றைய கட்டத்திற்கு தேவையில்லாதது. மார்க்ஸியம் காலாவதியாகிய ஒன்று..”
போராட்ட குணத்தில் இருந்து சோஷலிஸம் திசை திருப்பி விட்டது….
இன்றைய காலத்திலும் இதுவே நடக்கிறது.. “நம்முடைய ஆட்சி, நாமே இந்நாட்டு மன்னர்கள்”
“மக்களால் நடைபெறும் அரசியலே ஜனநாயகம். இங்கே அனைவரும் சமம் உங்களுக்கான உரிமைகள் உங்களிடமே இருக்கிறது. எதற்கு போராட்டம்?” அழகாக சொல்கிறது சோஷியல் ஷாவினிஸ்டு!
“மனிஷனா பொறந்தமா நிம்மதியா வாழ்ந்தமா செத்தமான்னு இல்லாம உலகத்தை நாசப்படுத்தி நிம்மதியை கெடுத்து அதற்கு புரட்சி என்ற பெயரைக் கொடுத்து வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள் தானா?
நயவஞ்சகமாக பேசுகிறது மக்களிடம்… “ஜனநாயகம் என்பது போலியானது” கார்ல் மார்க்சில் இருந்து பெரியார் வரை மனித நேய சிந்தனைவாதிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள்…
“போராடு! அப்பொழுதுதான் ஏதாவது வெற்றி அடைய முடியும்…” இதுவே நிதர்சனம்.
தமிழச்சி
04.04.2010
04.04.2010
0 comments:
Post a Comment