உண்மைசுடும்

Wednesday, 8 February 2012

2011-ல் இணையம்: டிவிட்டர் புரட்சி.. ஃபேஸ்புக் எழுச்சி!



ஃபேஸ்புக் போட்டியாக கூகுலின் ஜி+ அறிமுகம், ஸ்மார்ட் ஃபோன்களின் எழுச்சி, ஆன்ட்ராய்டு ஆதிக்கம், ஐபேடால் சுறுசுறுப்பான டேப்லெட் கம்ப்யூட்டர் சந்தை, போட்டி போட்டு அறிமுகமான ரீடர்களால் சூடுபிடித்த இ-புக் சந்தை, ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு ஏற்படுத்திய அதிர்வு என தொழில்நுட்ப உலகில் முக்கிய போக்குகளுக்கும் நிகழ்வுகளுக்கும் குறைவில்லை... எனினும், 2011-ம் ஆண்டின் தலையாய போக்கு (டிரெண்ட்) - சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், அதன் விளைவாக உண்டான புரட்சி அலையும் தான்!

ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவை வெறும் சமூக வலைத்தளங்கள் அல்ல; அவை உண்மையில் சமுக ஊடகங்கள் என உண‌ர்த்திய நிகழ்வுகள் பற்றிய பார்வை இதோ...

2011... சமூக வலைத்தளங்களில் சக்தியை உலகுக்கு உணர்த்திய ஆண்டு. இது, பலவிதங்களில் சரித்திர முக்கியத்துவம் மிக்கது.

1917 என்றவுடன் எப்படி ரஷ்ய புரட்சி நினைவுக்கு வருகிறதோ, 1857 என்றவுடன் எப்படி சிப்பாய் கலகம் நினைவுக்கு வருகிறதோ... 2011 என்றவுடன் துனீசியா, எகிப்து என அரபு நாடுகளில் அடுத்தடுத்து புரட்சி வெடித்ததுதான் நினைவுக்கு வரும்.

சரித்திரத்தில் இதற்கு முன்னர் ஒரே காலகட்டத்தில் இத்தனை புரட்சி வெடித்துள்ளனவா என்று தெரியவில்லை. ஆனால், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் வெடித்த புரட்சி, உடனே எகிப்தில் மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு, அதன் தொடர்ச்சியாக பகரைன், ஏமன், சவுதி அரேபியா, சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளில் மாற்றத்துக்காக மக்களை ஏங்க வைத்து, வீதியில் இறங்கி போராடவும் வகை செய்தது.

துனீசியாவை முன்னுதாரணமாக கொண்டு எகிப்தில் அரங்கேறிய புரட்சி வெற்றி பெற்ற செய்தி பரவத் துவங்கியதுமே அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களை குரல் கொடுக்க வைத்து, அடுத்த புரட்சி எந்த நாட்டில்? என கேட்க வைத்தது. நாளிதழ்களும் சர்வதேச மீடியாவும் அடுத்த புரட்சி சிரியாவிலா, ஏமனிலா எனறு ஆருடம் கூறத் துவங்கின. ஆட்சியில் இருந்தவர்கள் மத்தியிலும் இதே கிலியை ஏற்படுத்தியது.

இந்தப் புரட்சி அலையை உலகம் எதிர்பார்க்கவில்லை. மாற்றத்துக்கான மக்கள் போராட்டங்கள் சர்வாதிகார தேசங்களில் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டதை தான் உலகம் இது வரை கண்டுள்ளது. ஆனால், இப்படி மக்கள் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் சர்வாதிகார அதிபர்கள் பதவியை துறந்து நாட்டை விட்டு ஓடியதை உலகம் பார்த்து வியந்தது.

இந்த மக்கள் எழுச்சிக்கு பின்னே இருந்தது டிவிட்டரும், பேஸ்புக்கும் தான். இந்த சமூக வலைப்பின்னல் தளங்களின் உதவியோடு யூடியூப், ஜி-மெயில் மற்றும் ஃபிளிக்கர் போன்ற தளங்களையும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் செய்திகளையும் தகவலையும் பகிர்ந்து கொண்டதோடு, தங்கள் போராட்டத்தையும் ஒருங்கிணைத்து கொண்டனர்.

இந்த போராட்டதின் மற்றொரு முக்கிய அம்சம், முன்னின்று வழிநடத்த தலைவர் என்று யாரும் இல்லாமல், அதிருப்திக்கு ஆளான மக்கள் தாங்களாகவே இணைந்து மாபெரும் இயக்கமாக வலுப்பெற்றது தான். அதன் காரணமாகவே இந்த இயக்கங்களை ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனை சாத்தியமாகியதும் டிவிட்டரும், பேஸ்புக்கும் தான்.

பழ வியாபாரி பற்ற வைத்த தீ...

இந்தப் புரட்சிக்கான முதல் விதை துனீசியாவில் ஒரு அப்பாவியின் மரணத்தில் தான் விதைக்கப்பட்டது.

துனீசியா வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள நாடு. படித்த இளைஞர்கள் எதிர்காலம் பற்றிய கவலையோடு வேலை வாய்ப்புக்கு அதிக வழிகள் இன்றி தவித்து கொண்டிருந்தனர்.

இத்தகைய இளைஞர்களில் ஒருவர் தான் முகமது பவுவாசிசி. பட்டதாரியான முகமது வேலையில்லா திண்டாட்டம் பற்றி புலம்பிக் கொண்டிருக்கவில்லை. பட்டதாரி என்றபோதும் கெளரவம் எல்லாம் பார்க்காமல், கையில் இருக்கும் பணத்தை கொண்டு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார்.

ஆனால், அந்தத் தொழிலுக்கும் சோதனை வந்தது. ஒருநாள் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது தள்ளுவண்டியை பறிமுதல் செய்ததோடு, பழம் விற்பதற்கான உரிமம் பெறவில்லை என்று கூறி முகமதுவை லஞ்சம் கேட்டு அவர் துன்புறுத்தினார். கைதும் செய்துவிட்டார்.

இந்தச் சம்பவத்தால் அவமானமும் விரக்தியும் அடைந்த முகமது, வேதனையின் உச்சத்துக்கு சென்று தீக்குளித்துவிட்டார். 2010 டிசம்பர் 17-ல் இந்தச் சம்பவம் நடந்தது.  தீக்காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், ஜனவரி 4-ம் தேதி இறந்துபோனார்.

டிவிட்டர், பேஸ்புக் ஆயுதம்...

அந்த இளைஞனின் மரணம் அந்நாட்டையே உலுக்கியது. குறிப்பாக, இளைஞர்கள் கோபத்தால் கொந்தளித்து போயினர். இதுபோன்ற ஊமை கோபம் அவர்களுக்கு பழக்கபட்டது தான். இதற்கு காரணமான ஆட்சியை எதிர்த்தோ, அதிபரை எதிர்த்தோ அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி எல்லாம் அடக்கப்பட்டுவிடும். அதற்கு பயந்தே பலரும் வீதியில் இறங்கி போராடியதில்லை.

ஆனால், இந்த முறை துனீசிய இளைஞர்கள் தங்கள் குமுறலை பகிர்ந்து கொள்ள  தீர்மானித்தனர். மாற்றம் வரவே வராதா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள துடித்தனர். வீதியில் இறங்கி குரல் கொடுத்தனர். முகமது தற்கொலை செய்துகொண்ட சிடி நகரில் இளைஞர்கள் ஆர்பாட்டங்களை நடத்தினர்.

முகமது தீக்குளித்த காட்சி யூடியூப் விடியோவாக்கப்பட்டு, துனீசியாவின் நிலைமை இதுதான் பாருங்கள் என்பது போல ஃபேஸ்புக் பக்கங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அந்த கோர காட்சியை பார்த்தவர்கள் கொதித்துப் போயினர்; அதே வேதனையோடு அதனை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

 
டிவிட்டரிலும் குறும்பதிவுகளாக இந்த ஆவேசமும் குமுறலும் வெளிப்பட்டன. மாற்றமே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை குறும்பதிவுகளாக கொட்டித் தீர்த்தனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டால், அந்தத் தகவலையும் தயங்காமல் ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பகிர்ந்து கொண்டனர். கூடவே அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கான திட்டத்தையும் பகிர்ந்து கொண்டனர். இதற்காகவே காத்திருந்தவர்கள் போல ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராடத் துவங்கினர்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளியாகி கொண்டிருந்த ஆவேச குறும்பதிவுகள் போராட்டத்தை குறிக்கும் குறிச்சொற்களோடு சேர்த்து வெளியிடப்பட்டு (டிவிட்டர் மொழியில் ஹாஷ்டேக்) டிவிட்டரில் தகவல் நதியாக பெருகி ஓடின. சிடி முகமது, ஒபிதுனீஷியா என பல்வேறு பதங்களில் போராட்ட குறும்பதிவுகள் ஒன்றிணைக்கப்பட்டன. இவற்றை படித்தவர்கள் தாங்களும் போராட்டத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர்.

வழக்கமான போராட்ட முறைகளை காட்டிலும் இது போலீஸார் மற்றும் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி, ஒன்றாக திரள சுலபமாக இருந்தது. போராட்டத்தின்போது அடக்குமுறைக்கு ஆளாக, அந்தத் தகவலையும் டிவிட்டரில் வெளியிட்டனர்.

போலீஸாரின் நடமாட்டம் தென்படும் பகுதியில் அதனை முன்கூட்டியே பகிர்ந்து கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்ளவும் டிவிட்டர் கைகொடுத்தது.

இப்படி கட்டுப்படுத்தவே முடியாமல் மக்கள் போராட்டம் தீவிரமான நிலையில், மேற்கத்திய மீடியா இந்த எழுச்சி பற்றி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தன. துனீசியாவில் டிவிட்டர் புரட்சி அரங்கேறி கொண்டிருப்பதாக அடைமொழியும் கொடுத்தன.

ஒரு கட்டத்தில் இந்தப் போராட்டம் ஓயவே ஓயாது என்னும் நிலை உண்டாக, 24 ஆண்டுகளாக அதிபராக இருந்த அல் அபிடின் பென் அலி பதவி விலகியதோடு நாட்டை விட்டே வெளியேறினார்.

இந்த மாற்றத்தை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். உலகமே துனீசியாவில் உண்டான மாற்றத்தை வியப்போடு பார்த்தது.

எகிப்தில் எதிரொலி... 

துனீசியாவில் நிகழ்ந்தவற்றை பார்த்த எகிப்து நாட்டு மக்கள் தங்களுக்கும் இதேபோன்ற விடிவு காலம் வராதா என்று ஏங்கினர். துனீசியப் புரட்சியும் அதன் பயனாக மாற்றமும் சாத்தியம் என்றால், எகிப்திலும் இந்த மாயத்தை நிகழ்த்திக்காட்டலாமே என்று நம்பினர்.

ஃபேஸ்புக் பக்கம் ஒன்றின் மூலம்தான் அந்த நம்பிக்கை முதலில் விதைக்கப்பட்டது. 'நாம் எல்லோரும் காலித் தான்' என்னும் பெயரில் அந்த ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டது.

'காலித்' என்பவர் எகிப்து அரசின் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்து அதிகாரிகளின் வன்முறைக்கும் சித்ரவதைக்கும் ஆளாகி பலியானவர். அவரது பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கம் அமைக்கப்பட்டு இந்த வன்முறையும் சித்ரவதையும் தொடர வேண்டுமா என கேள்வி கேட்கப்பட்டது.

இந்த ஃபேஸ்புக் பக்கம் பெருந்தீயாக பற்றிக் கொண்டது. ஆயிரக்கணக்கானோர் இந்தப் பக்கத்தின் ஆதரவாளராக சேர்ந்து, இதில் உள்ள தகவல்களை தங்கள் ஃபேஸ்புக் வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். ஒரு பொதுக் கூட்டத்தில் ஏற்படும் விளைவை - ஏன்.. அதை விட அதிகமாகவே, இந்தப் பக்கம் உண்டாக்கிக் கொண்டிருந்தது.

ஜனவரி 25-ம் தேதி, 'பொறுத்தது போதும்; பொங்கி எழுவோம்' என அழைப்பு விடுக்கப்பட்டபோது 'அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்,' என்னும் கோஷத்தோடு பல்லாயிரகணக்கானோர் கெய்ரோவின் பிரதான இடமான தாகிர் சதுக்கத்தில் திரண்டனர். இதைப் பார்த்து மேலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். தாகிர் சதுக்கமே 31 ஆண்டுகளாக பதவியில் இருந்த அதிபர் முபாரக்குக்கு எதிரான கோஷங்களால் குலுங்கியது.

அரசும் அதிகாரிகளும் தங்கள் வழக்கமான அச்சுறுத்தலையும் அடக்குமுறையையும் கையாண்டு பார்த்தனர். ஆனால் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டு போராட்டம் வலுப்பெற்றது. அடி வாங்க வாங்க உடனே அதையும் டிவீட் செய்தனர்.

நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெறவே, முபாரக் வேறு வழியில்லாமல் பணிந்து பதவி விலகினார்.

அடுத்தடுத்து இரண்டு நாடுகளில் சமூக வலைத்தளங்களின் உதவியோடு சாமானிய மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்ததைப் பார்த்த பக்ரைன், சிரியா, ஏமன் போன்ற ( ஜனநாயக ஆட்சியில் இல்லாத ) நாட்டு மக்களும் மாற்றத்துக்காக குரல் எழுப்பியபடி வீதியில் இறங்கி போராடித் துவங்கினர்.

விளைவு.. அடுத்த புரட்சி எங்கே வெடிக்கும்? என பரபரப்பாக பேச வைத்தது. பல நாடுகள் இன்டெர்நெட்டுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டுக்கும் வாய்ப்பூட்டு போடப் பார்த்தன. ஒரு சில நாடுகளில் தேர்தல் நடத்துவது பற்றி பேசவும் ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டனர்.

அரபு நாடுகள் முழுவதும் மாற்றத்துக்கான மக்கள் எழுச்சி அலை வேகமாக வீச, சீனாவும் வடகொரியாவும் லேசாக நடுங்கிப்போயின.

சர்வாதிகார அதிபர்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை தணிக்கை செய்வது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்யவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் போனதே இந்தப் போராட்டங்களின் முதுகெலும்பாக அமைந்தன.

அடக்குமுறைக்கு கற்பிக்கப்பட்ட பாடம்...

ஃபேஸ்புக், டிவிட்டர் மூலம் எவரும் விரும்பிய தகவல்களை வெளியிட்டு பொதுகருத்தின் அடிப்படையில் ஆதரவு திரட்டலாம் என்னும் சாத்தியம் சாமானியர்கள் மத்தியிலும் போராட்ட உணர்வை ஊட்டியது.

அடக்குமுறையை பிரயோகம் செய்ய அரசுக்கு ஆயிரம் வழிகள் இருந்தால், அதனை எதிர்த்து நிற்கவும் ஆயிரம் வழிகள் உள்ளன‌ என்பதை ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் உண‌ர்த்தின.

இதனிடையே, நடந்தது டிவிட்டர் புரட்சி தானா, இதற்கு டிவிட்டரும் ஃபேஸ்புக்கும் தான் மூலக்காரணமா என்றெல்லாம கூட பரபரப்பாக விவாதிக்கப்பட்டன. டிவிட்டர் போன்ற‌ தளங்களின் பங்கு தேவையில்லாமல் மிகைப்படுத்தப்படுவதாகவும் கூற‌ப்பட்டது.

இந்த விவாதம் ஒரு புற‌ம் இருக்க, டிவிட்டரும் ஃபேஸ்புக்கும் செய்தி வெளியீட்டு சாதனமாகவும் இருப்பதையும் சாதாரண மக்கள் அடக்குமுறைக்கு எதிராக அதனை ஆயுதமாக பயன்ப‌டுத்தலாம் என்ப‌தும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமானது.

எல்லோரும் எதிர்பார்த்தது போல வேறு எந்த அரபு நாட்டிலும் புரட்சி வெற்றி பெறாவிட்டாலும் யாருமே எதிர்பாராத திருப்பமாக முற்றிலும் புதிய இடத்தில் போராட்டம் வெடித்தது.

'ஆக்குபை வால்ஸ்டிரீட்'

முதலாளித்துவத்தின் கோட்டையான அமெரிக்காவில் 'ஆக்குபை வால்ஸ்டிரீட்' என்னும் கோஷத்தோடு செப்டம்பர் மாதம் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா நிதி உலகின் அச்சாணி என்று கருதப்படும் பங்குச்சந்தை அமைந்துள்ள வால்ஸ்டிரீட்டில் இளைஞர்களும் வேலையில்லாத அமெரிக்கர்களும் பெட்டி படுக்கையோடு முகாமிட்டனர். நிதி நிறுவங்களின் பேராசைக்கும் அமெரிக்க செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பதையும், எதிர்த்து இந்த முற்றுகை போராட்டம் துவங்கியது.

இந்தப் போராட்டக்காரர்கள் அமெரிக்க அரசையோ குறிப்பிட்ட நபரையோ எதிர்க்காமல் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் வால்ஸ்டிரீட் முதலைகளை எதிர்த்து குரல் எழுப்பினர்.

பொருளாதார சுமையை தாங்குவது சாமானியர்கள். ஆனால், வளர்ச்சியின் பயனை அனுபவிப்பது மட்டும் நிதித்துறையினரா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி, அமெரிக்காவில் நிலவும் ஏற்ற‌த்தாழ்வை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

நியூயார்க் நகரில் துவங்கிய இந்த போராட்டம் மாதக் கணக்கில் நீடித்ததோடு அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் பரவியது. பின்னர் உலக நகரங்களுக்கும் பரவியது.

இப்படி ஒரு போராட்டத்தை அமெரிக்கா தனது மண்ணில் இதுவரை கண்டதில்லை. அதன் அடிப்டையான அமசங்களையே கேள்விகுள்ளாக்கி நடைபெறும் இந்தப் போராட்டமும் ஒரேயொரு குறுஞ்செய்தியில் இருந்து தான் ஆரம்பமானது.

கனடாவில் இருந்து வெளியாகும் ஆட்பச்டர்ஸ் என்னும் நுகர்வோர் விழிப்புணர்வு பத்திரிகை ஆசிரியர் இத்தகைய போராட்டத்துக்கான விள‌ம்பரத்தை வெளியிட்டு, அதுபற்றி டிவிட்டரிலும் பகிர்ந்து கொண்டார். இந்தப் பொறியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி வால்ஸ்ட்ரீட்டில் வெடித்தது. அது மட்டும் அல்லாமல், தொடர்ந்து அந்தப் போராட்டத்தை தக்க வைத்து கொள்ள டிவிட்டரும் ஃபேஸ்புக்குமே பயன்படுகின்ற‌ன.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வேலை வாய்ப்பற்ற அமெரிக்கர்கள் எகிப்தில் நடைபெற்ற தாகிர் சதுக்க போராட்டத்தை தங்களுக்கான முன்னுதாரணமாக குறிப்பிட்டது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

பொதுவாக அமெரிக்காவும் அமெரிக்கர்களும் தான் உலகுக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், அந்நாடே எகிப்து எழுச்சியை பார்த்து ஊக்கம் பெறுகிற‌து என்றாக உலகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தானே பொருள்.

இந்த மாற்றத்துக்கு வித்திட்ட ஆண்டாக சமூக வலைத்தள ஊடகம் என்று சொல்லப்படும் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரின் ஆற்றலை உணர்த்திய ஆண்டாக‌ 2011-ஐ நினைவுகூரலாம்.
***
இவை வெறும் 'பிட்ஸ்' அல்ல!
அண்ணா அலை!
அரபு நாடுகளில் உண்டான புரட்சி அலையை பற்றி உலகம் ஆர்வத்தோடு விவாதித்து கொண்டிருந்தபோது இந்தியாவில் சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே, லோக்பால் மசோதாவுக்காக ஊழலுக்கு எதிரான இயக்கத்தை துவக்கியது தற்செயலா என்று தெரியவில்லை. ஆனால், டெல்லியில் ஹஜாரே உண்ணாவிரதத்துக்கு அழைப்பு விடுத்தபோது, அங்கு கூடியவர்களில் பெரும்பாலானோர் டிவிட்டர் அல்லது ஃபேஸ்புக் மூலம் வந்து சேர்ந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஹஜாரேவுக்கு ஆதரவு குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியதிலும் டிவிட்டரில் கேட்ட குரல்களுக்கு பங்கு இருக்கிறது!
 
**
தமிழக மீனவருக்கான குரல்!
ஒரு ஹாஷ்டேக் (#) எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை தமிழக மீனவர் மீதான தாக்குதல் தீவிரமடைந்தபோது இணையத்தில் கோபாவேசத்தோடு எழுந்த ஆதரவு குரலின் அடையாளமான #TNfisherman பதம் உணர்த்தியது.

இலங்கை கடற்படையால் மினவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதற்கு நீதிகேட்டு டிவிட்டர் பயனாளிகள் இந்த பதத்தோடு பதிவு செய்த குறும்பதிவுகளில் தமிழகத்தின் தார்மீக கோபத்தை காண முடிந்தது. டிவிட்டரில் முன்னிலை பெற்ற முதல் தமிழகம் சார்ந்த பதிவாகவும் இந்த பிரச்னை அமைந்தது!

**
லண்டன் களங்கம்!
டிவிட்டரும் ஃபேஸ்புக்கும் புரட்சிக்கும் கிளர்ச்சிக்கும் மட்டும் அல்ல.. கலவரத்துக்கும் துணை நிற்கும் என்பதை லண்டன் கலவரம் காட்டியது. போலீஸ அதிகாரியால் இளைஞர் ஒருவர் பலியானதை அடுத்து, ல‌ண்டனில் வெடித்த கலவரம் டிவிட்டரில் வெளியான துவேஷ பதிவுகளாக பரவியதாக குற்றம்சாட்டப்பட்டது. சமூக ஊடக பயன்பாட்டில் கவனம் தேவை என்பதை இது உணர்த்தியது.

*
உயிர் காத்த டிவிட்டர்!
துனீசியாவில் புரட்சி புயல் வீசிக்கொண்டிருந்தபோது வெளியான குறும்பதிவுகளில் ஒன்று 'டிவிட்டர் என் உயிர் காத்தது,' என்று தெரிவித்தது. புல்லட் ஸ்கான் என்னும் டிவிட்டர் பெயர் கொண்ட இளைஞரின் குறும்பதிவு அது.

அனறைய தினம் தனது வீட்டில் இருந்து எட்டிப்பார்த்தபோது தெருவில் முகமூடி அணிந்த கூலிப்படையினர் திரிவதை பார்த்த அந்த இளைஞர், டிவிட்டரில் அந்த தகவலை வெளியிட்டார். அந்த தகவல் மேலும் பலரால் ரீடிவீட் செய்யப்பட்டு, பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் பயனாக சிறிது நேரத்தில் எல்லாம் ராணுவம் அங்கே ரோந்து வந்தது. இதனால் கூலிப்படைகள் காணாமல் போக,  அந்த இளைஞர் டிவிட்டருக்கு நன்றி தெரிவித்தார்.

**
பேஸ்புக் அமைச்சர்!
துனீசியா போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவராக வலைப்பதிவாளர் ஸ்லிம் அமாமொவு கருதப்படுகிறார். போராட்டத்தின்போது தான் கைது செய்யப்பட்ட விவரத்தை அவர் டிவிட்டர் மூலம் உலகுக்கு அறிவித்தார். அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டதையும் டிவிட்டரில் வெளியிட்டார்.
புரட்சிக்கு பின் புதிய அரசாங்கம் அமைந்தபோது இவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. இணைய கட்டுப்பாடு தொடர்வாதாக கூறி, அவர் ராஜினாமா செய்து விட்டாலும் வலைப்பதிவாளர் ஒருவர் அமைச்சரானது வரலாறு தான்!
*
இணையம், தொழில்நுட்பம் பற்றி எழுதிவரும் கட்டுரையாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்:http://cybersimman.wordpress.com/

0 comments:

Post a Comment